Saturday, January 14, 2017

மனநிறைவு

வாழ்க வையகம்! வாழ்கவளமுடன்!!.

உலக பொது அருள்நெறி  சமய ஆண்டு :  31

ஜனவரி : 15

இன்றைய சிந்தனை :

மனநிறைவு:

பேரியக்க மண்டலம் கணக்கிட இயலாத பருமன் உடையது. அதில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள், (சூரியன்கள்) கோள்கள் அதனதன் விரைவிலே பாதையிலே சற்றும் பிறழாமல் உலவிக்கொண்டிருக்கின்றன. மனிதர் வாழும் இப்பூவுலகம் மிகப் பெரியது. கணக்கிட முடியாத காலத்தையுடையது. மனித இனம், மற்ற உயிரினங்கள் எண்ணிலடங்கா. இவையெல்லாம் இறையென்ற பூரண ஆற்றலின் அழுத்தமென்ற விரைவாலும் ஒழுங்காற்றல் என்ற பிறழா நெறியாலும் பிசகாமல் சத்தியம் தவறாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இப்பேராற்றலின் கருணையினால் ஒவ்வொவொரு சீவனும் பிறக்கும் போதே அதன் வாழும் காலம் வரைக்கும் தேவையான அனைத்தும் இருப்பாகவும் இணைக்கப்பட்டும் உள்ளன. இவற்றையெல்லாம் நமது மனதை விரித்து எண்ணிப் பார்ப்போம்.

இறை நிலை, பேரியக்க மண்டலம், உயிரினங்கள், இன்ப துன்ப விளைவுகள், எண்ணம், செயல்கள் விருப்பம் நிறைவு என்ற எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்ந்து இணைந்த ஏற்பாடாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நமக்கென்ன குறை. உண்மையில் குறையே இயற்கையில் எள்ளளவும் இல்லை.

பின் ஏன் மனக்குறை. உடல் நலக் குறை.

மனித உள்ளத்தில் தேவையுணர்வு, விருப்பம் என்று இரண்டு எண்ண எழுச்சிகள் உள்ளன. தேவை இயற்கையானது. உடலையும், உயிர் வளர்ச்சியும் ஒட்டி எழுவது. விருப்பம் தேவையிலிருந்தும் எழலாம், கற்பனையாகவும் பழக்கத்திலிருந்தும் எழலாம். தேவையை ஒட்டியதாகவே விருப்பத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டால் நீயே ஞானி. கற்பனையாகவும் பழக்கத்தை ஒட்டியும் எழும் விருப்பங்களை அப்படியே செயல்படுத்த எண்ணத்தை உடலை இயங்க விடும்போது உனக்கு அமைந்த ஞானத்தை பயன்படுத்தாத வீணனாகிறாய்.

வாழ்க வையகம்! வாழ்கவளமுடன்!!.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

No comments:

Post a Comment