Saturday, December 31, 2016

மனவளக்கலை ஒரு பெட்டகம்

வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!!

இன்றைய சிந்தனை :

ஜனவரி 1 :

மனவளக்கலை ஒரு பெட்டகம் :

தான் உயரவும், பிறரையும் உயர்த்தவும் ஏற்ற பயிற்சியும், தொண்டும், இரண்டும் மனவளக்கலையில் அடங்கியுள்ளன.

இரண்டு வேலையும் ஆக்கினை, துரியம், சாந்தியோகம் தவறாமல் தவமியற்றி வாருங்கள். மன அமைதி அறிவுக்கூர்மை, அறிவின் ஓர்மை, மன உறுதி இவை உண்டாகும்.

தற்சோதனையில் எண்ணங்களை ஆராயுங்கள். விழிப்பு நிலையில் அறிவு செயல்படும். நலம், தீது உணர் ஆற்றல் உண்டாகும். வேண்டாப் பதிவுகளை - வினைபதிவுகளை மாற்றி விடலாம்.

ஆசைச் சீரமைப்பு பயிற்சி செய்யுங்கள். உடல் நலம்; மனவளம், பொருள் வளம், நற்புகழ், நிறைவு இவை பெருகும். அமைதியுண்டாம்.

சினம் தவிர்ப்பு பழகுங்கள். குடும்பம், நண்பர்கள், தொழில் செய்யுமிடத்திலுள்ளோர், உற்றார் உறவினர் இவர்களிடம் உங்கள் அன்பு, நட்பு, இவைபெருகும். இனிமையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

கவலை ஒழிப்பு பழகுங்கள். அச்சமின்மை, மெய்யுணர்வு, உடல் நலம், மனநிறைவு இவையுண்டாகும்.

நான் யார் என்ற ஆராய்ச்சியில் தெளிவு பெறுங்கள். பேரியக்க மண்டலம், தோற்றம், இயக்கம், விளைவு அணைத்து மறை பொருட்களும், மனம், உயிர், மெய்ப் பொருள் உணர்வு உண்டாம்.

இவ்வளவு பயிற்சியும் பழக்கமும் இணைந்த ஒரு வாழ்க்கை நலக்கல்வியே "மனவளக் கலை" யாகும். இக்கலையை எளிய முறையில் கற்கும் பேறு பெற்றிருக்கீர்கள். இக்கலையின் மாண்புணர்ந்து பழகி நலம் பெற்று மனதில் நிறைவு பெறுங்கள். மனநிறைவைப் பெற்றுவிட்டால் அறிவு மேலும் உயர்ந்து சிறந்து விளங்கும். பிறவியின் நோக்கம் வெற்றி பெறும். இத்தகைய உயர் வாழ்வுக்கு ஏற்ற ஒரு பெட்டகம் மனவளக்கலை.

அமைதியோடு வாழ :

"புத்தாண்டு இன்று பிறந்துளது உலகிற்கு
உத்தமர்கள் அறிவிற்கு ஒத்தபடி எல்லோரும்
சித்தம் மகிழ்வோடு சீர்திருந்தி வாழ்வின் வளம்
அத்தனையும் பெற்று அமைதியோடு வாழ்கவே !"

வாழ்த்து :

"அறிவினிலே சிறந்தோங்கி நீங்கள் வாழ்வீர் !
அணுவும் அதன் இயக்கமும் போல் பிரிவு இன்றி
நெறியினிலே பிறழாது நீங்கள் வாழ்வீர் !
நிலவுலகும் அதன் கவர்ச்சி ஆற்றலும் போல்
வறியோர்க்கு வாழ்வளிப்பீர், உள்ளம் ஒன்றி
வறுமையின்றிச் சூரியனும் ஒளியும் போன்று
சிறியவரும் பெரியவரும் நலமே காணும்
சிறப்புடனே பல்வளமும் பெற்று வாழ்வீர்!"

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

No comments:

Post a Comment